நான் எப்போதாவது அப்படி சொன்னேனா? யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல் நாத்


நான் எப்போதாவது அப்படி சொன்னேனா? யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல் நாத்
x

சிந்த்வாரா மாவட்டத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள கமல் நாத், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சிந்த்வாரா (மத்திய பிரதேசம்):

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல் நாத் பா.ஜ.க.வில் இணையப் போவதாக கடந்த சில தினங்களாக யூகமான தகவல் பரவியது. கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

இந்நிலையில், சிந்த்வாராவில் கமல் நாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜ.க.வில் சேரப்போவதாக வெளியான தககவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல் நாத் கூறியதாவது:-

நீங்கள்தான் (ஊடகம்) அப்படி சொல்கிறீர்கள். இதை வேறு யாரும் சொல்லவில்லை. நான் என் வாயால் சொல்லி அதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? அதற்கான அறிகுறி ஏதாவது உள்ளதா? ஒன்றுமில்லை. நீங்களே அதை கூறிக்கொண்டு, என்னிடம் கேட்கிறீர்கள். முதலில், நீங்கள் தெரிவித்த தகவலை மறுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிந்த்வாரா மாவட்டத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள கமல் நாத், மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு தொகுதிகளுக்கு சென்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.


Next Story