எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா நடத்திய மந்திரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நெருக்கடி கொடுக்கட்டும்

5 முக்கிய உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது. அதிகாரிகள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அதிகாரிகள் அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, சில வழிமுறைகளை முன்வைத்துள்ளனர். அதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக உள்ளோம். நாளை (அதாவது இன்று) நடைபெற இருந்த மந்திரிசபை கூட்டம் நாளை மறுநாள் (நாளை) நடைபெற உள்ளது. யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். குமாரசாமி என்ன வேண்டுமானாலும் கூறட்டும். நெருக்கடி வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.

அடிபணிய மாட்டோம்

போராட்டம் நடத்தட்டும். ஜனநாயகத்தில் அரசு குறித்து பேசுவதை தடுக்க முடியாது. பிரதமர் மோடி அனைவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். அதுபற்றி குமாரசாமி பேசுவது இல்லை. பா.ஜனதா முன்பு 600 வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 50 வாக்குறுதிகளை மட்டுமே பா.ஜனதா நிறைவேற்றியது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நியாயமான முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

நிபந்தனை என்பதை விட முறையான வழியில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம் அல்லவா?. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எல்லா தகவல்களையும் சேகரித்து அதன் அடிப்படையில் பயனாளர்களை முடிவு செய்வோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story