உத்தர பிரதேசத்தில் எருமைக்கு டி.என்.ஏ. பரிசோதனை...


உத்தர பிரதேசத்தில் எருமைக்கு டி.என்.ஏ. பரிசோதனை...
x

எருமைக்கன்றின் உரிமையாளரை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுக்குட்டி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி காணாமல் போனது. இதையடுத்து பல இடங்களில் தனது எருமைக்கன்றை தேடி அலைந்த அவர், அருகில் உள்ள சஹரான்பூரின் பீன்பூர் கிராமத்தின் சத்வீர் என்பவரிடம் ஒரு எருமைக்கன்று இருப்பதை அறிந்துள்ளார்.

அது தனது எருமைக்கன்று தான் என்றும், அதை தன்னிடம் ஒப்படைக்குமாறும் சந்திரபால் கேட்டபோது, எருமை கன்றை தர சத்வீர் மறுத்துள்ளார். இது குறித்து சந்திரபால் பீன்பூர் கிராமப் பஞ்சாயத்து, அப்பகுதி காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்துள்ளார்.

ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஷாம்லி மாவட்ட எஸ்.பி. சுக்ரிதி மஹாதேவிடம் புகார் செய்துள்ளார். மேலும் தான் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அனுப்பிய புகாரின் நகலையும் அளித்துள்ளார்.

இதையடுத்து, எஸ்பி சுக்ரிதி, டி.என்.ஏ. சோதனை செய்து உண்மையை கண்டறியுமாறு ஷாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனைக்காக சாம்பிளை எருமைக்கன்றிடம் எடுத்துச் சென்றுள்ளனர். இதை சந்திரபாலிடம் உள்ள தாய் எருமையின் டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்பட உள்ளது.


Next Story