பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்: பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட்டு சம்மன்...!


பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்: பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட்டு சம்மன்...!
x

பிரதம் மோடி குறித்த ஆவணப்படம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி,

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார்.

நரேந்திரமோடி தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ள நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் டெல்லி வன்முறை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

பிபிசி ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாக இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி தடை விதித்தது.

மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனாலும், தடையை மீறி இந்த ஆவணப்படம் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு நடத்தியது. பிபிசி ஆவணப்படம், அதற்கான தடை, அதனை தொடர்ந்து பிபிசி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு சம்பவங்களில் இந்தியா அரசு மீது சில அமைப்புகள் விமர்சனம் செய்தது. குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் இந்திய அரசை விமர்சித்தன.

இதனிடையே, 'இந்தியா: மோடி கேள்விகள்' ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் இணையதளத்தில் இந்த ஆவணப்படம் சட்டவிரோதமாக பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'இந்தியா: மோடி கேள்விகள்' ஆவணப்படம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு எதிராக டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி தொடர்ந்த இந்த வழக்கில், இந்தியா: மோடி கேள்விகள் ஆவணப்படம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளை அவமதிப்பதாகவும் இது தொடர்பாக பிபிசி, விக்கிமீடியா, இண்டர்நெட் ஆர்ச்சிவ் ஆகிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய அரசால் தடை செய்யப்பட்டபோதும் விக்கிபீடியா தகவல் களஞ்சியத்தின் துணை நிறுவனமான விக்கிமீடியாவில் 'இந்தியா: மோடி கேள்விகள்' ஆவணப்படத்தை பார்ப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆவணப்படம் அமெரிக்காவை தலைமையாக கொண்ட டிஜிட்டல் நூலகமான இண்டர்நெட் ஆர்ச்சிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி கோர்ட்டு இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி பிபிசி செய்தி நிறுவனம், விக்கிமீடியா, இண்டர்நெட் ஆர்ச்சிவ் ஆகிய நிறுவனங்களு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story