ரோண் சட்டசபை தொகுதியில்; ரூ.1,500 செலவு செய்து 1,463 வாக்குகள் வாங்கிய கோபி மஞ்சூரியன் வியாபாரி


ரோண் சட்டசபை தொகுதியில்; ரூ.1,500 செலவு செய்து 1,463 வாக்குகள் வாங்கிய கோபி மஞ்சூரியன் வியாபாரி
x

ரோண் தொகுதியில் கோபி மஞ்சூரியன் வியாபாரி ஒருவர் ரூ.1,500 செலவு செய்து 1,463 வாக்குகள் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது

ராய்ச்சூர்:

கதக் மாவட்டம் ரோண் டவுன் நரேகல் 3-வது வார்டு ஆச்சார்யா காலனி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தா ரத்தோடு. இவர் அந்தப்பகுதியில் சாலையோரம் கடை அமைத்து கோபி மஞ்சூரியன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சிவானந்தா ரத்தோடு, கர்நாடக சட்டசபை தேர்தலில் ரோண் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் ஆடம்பரமாக செலவு செய்து பிரசாரம் செய்யாமல், குறைந்த செலவில் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். அதாவது, தேர்தலில் போட்டியிடுபவர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் படை பலத்துடன் சென்று மக்களை கவர தீவிர பிரசாரம் செய்வார்கள். ஆனால் சிவானந்தா ரத்தோடு தன்னுடன் யாரையும் அழைத்து செல்லாமல், தனியாக சென்று அதுவும் ேராண் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்சில் சென்று பிரசாரம் செய்தார். மேலும், கையில் ஒரு மைக் மட்டும் வைத்து கொண்டு தனக்காக பிரசாரம் செய்தார். இந்த தேர்தலுக்காக அவர் ரூ.1,500 மட்டுமே செலவு செய்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவு கடந்த 13-ந்தேதி வெளியானது. அதில், சிவானந்தா ரத்தோடு 1,463 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரை விட அவர் அதிக வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story