தேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


தேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 14 March 2024 4:49 PM GMT (Updated: 14 March 2024 11:24 PM GMT)

தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது.

புதுடெல்லி,

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதோடு எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள், நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது. இது தொடர்பாக நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story