கால்வாயில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயர் உடல் மீட்பு


கால்வாயில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயர் உடல் மீட்பு
x

மிதுன்

பெங்களூருவில் பலத்த மழைக்கு கால்வாயில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கால்வாயில் அடித்து செல்லப்பட்டார்

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காயத்திரிநகர் பகுதியில் வசித்து வந்தவர் மிதுன் (வயது 24). சிவமொக்கா மாவட்டம் சாகரை சேர்ந்த இவர், பெங்களூருவில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி இரவு 2 மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக நகரில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

அதுபோல், காயத்திரிநகரிலும் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது மிதுன் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிளை மீட்க மிதுன் முயன்றார். அந்த சமயத்தில் அங்குள்ள சாக்கடை கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் மிதுன் அடித்து செல்லப்பட்டார். அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டார்கள். ஆனால் நேற்று முன்தினம் வரை மிதுன் உடல் கிடைக்கவில்லை.

என்ஜினீயர் உடல் மீட்பு

இதையடுத்து, நேற்றும் ரப்பர் படகு மூலம் கால்வாயில் மிதுனின் உடலை தேடும் பணி நடந்தது. இதில், 30-க் கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். பின்னர் நேற்று காலையில் கால்வாயில் இருந்து மிதுன் உடல் மீட்கப்பட்டது. அவர் அடித்து செல்லப்பட்டதில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அவரது உடலை மீட்பு குழுவினர் மீட்டு இருந்தார்கள். 48 மணிநேரத்திற்கு பின்பு மிதுன் உடல் சிக்கி இருந்தது.

பின்னர் மிதுன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிதுனின் குடும்பத்திற்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்று உறவினர்களும், அப்பகுதி மக்களும் மாநகராட்சி மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story