அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார்


அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார்
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 6:45 PM GMT)

அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு:

அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்துள்ளார்.

தொழில் அதிபர்

யாதகிரி மாவட்டம் சகாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவர் தொழில் அதிபர் ஆவார். இவர் அரசு வேலைகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பணம் வாங்கி உரியவர்களுக்கு கொடுப்பது போன்ற இடைத்தரகர் வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு தெரிந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் அரசு அலுவலகங்களில் முதல் நிலை மற்றும் 2-ம் நிலை உதவியாளர், உதவி என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களை ஒதுக்குவதாக வும் அதனை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.

இதையடுத்து அவர்களிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வசூலித்துள்ளார். பின்னர், அந்த பணத்தை பெங்களூருவில் வசித்து வரும் 4 பேரை சந்தித்து கொடுத்துள்ளார். அதாவது அவர்கள் தான் தேர்வு தாள்களை திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள ஓட்டலில் சந்தித்து அவர் ரூ.1¾ கோடியை 4 பேரிடம் கொடுத்தார்.

ரூ.1½ கோடி மோசடி

இதையடுத்து தேர்வு முடிவுகள் வந்து பல நாட்கள் ஆகியும் பணம் கொடுத்தவர்கள் பெயர் தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. உடனே சம்பந்தப்பட்டவர்கள் இடைத்தரகரிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். அவரும், பெங்களூருவில் உள்ள 4 பேரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளனர். இதையடுத்து பெங்களூருவுக்கு நேரில் வந்த அவர் தனது பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது அவரிடம் ரூ.35 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர். மீதி ரூ.1½ கோடியை கொடுக்காமல் மோசடி செய்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த போலீசார் பணத்துடன் இருந்த அவர்கள் 5 பேரையும் பிடித்து சென்றனர். அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக லோகேஷ், அபிராம், மகேஷ், மகாந்தேஷ் ஆகிய 4 பேர் மீதும் தொழில் அதிபர் புகார் அளித்தார். அதாவது அவர்கள் 4 பேரும் தாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story