முன்னாள் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட முதியவர் கொலை


முன்னாள் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட முதியவர் கொலை
x

கோலார் தங்கவயலில் முன்னாள் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட முதியவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோலார்:

மாயம்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா பாரண்டஹள்ளி அருகே முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 1-ந்தேதி முன்னாள் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் விழா நடந்தது. இந்த பிறந்தநாள் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்தனர்.

இதில், மாதநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனிவெங்கடப்பா என்கிற தாய்லுரப்பா (வயது 70) என்பவரும் வந்திருந்தார். இந்த நிலையில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற அவர் வீட்டுக்கு திரும்பி செல்லவில்லை. இதனால் முனிெவங்கடப்பாவின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

கொலை

இந்த நிலையில், பிறந்தநாள் விழா நடந்த இடத்தில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பேத்தமங்களா போலீசார் அங்கு சென்று பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் மாதநாயக்கனஹள்ளியை சேர்ந்த முனிவெங்கடப்பா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பேத்தமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்று போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி சென்று பார்வையிட்டார். மேலும் விழாவில் பங்கேற்றவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story