கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க தேவையான ஆவணங்கள்; அரசாணை வெளியீடு


கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க தேவையான ஆவணங்கள்; அரசாணை வெளியீடு
x

கா்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கா்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இலவச பயணம்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் உள்பட 5 திட்டங்களை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதில் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான அரசாணையை மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கர்நாடகத்தில் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள், மாணவிகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கும் திட்டம் வருகிற 11-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் இந்த திட்டத்தின் சலுகை வழங்கப்படுகிறது. இதற்கு சேவா சிந்து இணையதள சேவை மூலம் 'ஸ்மார்ட் கார்டு' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த கார்டு பெறும் வரை அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் கீழ்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை நடத்துனரிடம் காட்ட வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை

* ஆதார் அட்டை

* வாக்காளர் அடையாள அட்டை

* ஓட்டுனர் உரிமம்

* கா்நாடகத்தில் வசிக்கும் முகவரியுடன் மத்திய-மாநில அரசுகள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்

* மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மூத்த குடிமக்கள் நல இயக்குனரகம் வழங்கியுள்ள அடையாள அட்டை

* வெளிமாநில பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி இல்லை.

அரசு வழங்குகிறது

இந்த அடையாள அட்டைகளை 'டிஜிலாக்கர்' மூலம் டிஜிட்டல் வடிவிலும் நடத்துனரிடம் காட்டலாம். பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் நடத்துனர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட டிக்கெட் வழங்க வேண்டும். இதை நடத்துனர்கள் இலவசம் என்று கருதக்கூடாது. இந்த தொகையை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்குகிறது.

நடத்துனர்கள் மற்றும் பெண்கள், மாணவிகளுக்கு சக்தி இலவச டிக்கெட் வழங்க வேண்டும். அவர்கள் பஸ்சில் பயணிக்க தொடங்கும் இடம் மற்றும் சென்றடையும் இடத்தை குறிப்பிட்டு டிக்கெட் வழங்க வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story