மங்களூருவுில் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் 'அபேஸ்'


மங்களூருவுில்  வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:46 PM GMT)

ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்தை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் உடுப்பியில் நடந்துள்ளது.

மங்களூரு-

ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்தை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் உடுப்பியில் நடந்துள்ளது. இதுதொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வியாபாரி

உடுப்பி (மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த். வியாபாரியான இவர் நேற்று முன்தினம் உடுப்பி டவுனில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். அப்போது அவருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் உடனடியாக அவர் ஆன்லைனில் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தேடினார்.

அப்போது அவருக்கு வாடிக்கையாளர் சேவை மைய எண் ஒன்று கிடைத்தது. அதில் தொடர்பு கொண்டு பிரசாந்த் பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் பிரசாந்தின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.

ஆன்லைன் பணப்பரிமாற்றம்

அடுத்த சில நிமிடங்களில் அவர் பிரசாந்தின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்தை அபேஸ் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரசாந்தின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் பதறிப்போன பிரசாந்த் உடனடியாக தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று முறையிட்டார். அப்போது தான் மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்ததை அவர் உணர்ந்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதுபற்றி பிரசாந்த் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story