அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரியுடன் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி, 'சீனியாரிட்டியை மாற்றி அமைக்க மேலும் காலஅவகாசம் தேவைப்படுகிறது' என வாதிட்டார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு கண்ட பிறகு, மீண்டும் எப்படி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியும் என்றும், அதில் விசாரிக்க என்ன உள்ளது என்றும் கேட்டதுடன், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது இதன் மூலம் தெரிவதாகவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நாளை ஆஜராகட்டும், முடித்து வைத்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மீண்டும் தொடங்க வேண்டி வரும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தேவையான கால அட்டவணையை உருவாக்க அவகாசம் தேவை என்பதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்ததுடன், நேர்மறையான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.


Next Story