திறந்த காரில் தொங்கியபடி பயணம்; பிரதமர் மோடிக்கு எதிராக போலீசில் புகார்


திறந்த காரில் தொங்கியபடி பயணம்; பிரதமர் மோடிக்கு எதிராக போலீசில் புகார்
x

கோப்பு படம்

திறந்த காரில் தொங்கியபடி பயணம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு எதிராக கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

திருவனந்தபுரம்,

பிரதமர் மோடி கடந்த 2 நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 7 நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது இந்த பயணத்தில், மத்திய பிரதேசத்தின் ரேவா நகரில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு, மொத்தம் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார்.

அதன்பின்னர், அன்று மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காரில் நின்று கொண்டு மக்களை நோக்கி கையசைத்து பயணிக்கும் வழக்கம் இன்றி, இந்த முறை கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்தபடி சாலையில் நடந்தே சென்றார். மக்களும் பூக்களை தூவி அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதுபோன்று 20 நிமிடங்கள் நடந்து சென்ற அவர், அதன்பின் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் செல்வதற்காக காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது, காரின் ஒரு பக்க கதவு திறந்தபடி, அதில் தொங்கியபடி சாலையோரம் நின்றிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி அவர் சென்றார்.

இதன்பின்பு, கேரளாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். கொச்சியில் அவரது இந்த கார் பயணத்திற்கு எதிராக கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதில், காரின் கண்ணாடி மீது பூக்கள் விழுந்து அதனை மறைத்து விட்டன. இதனால், கார் ஓட்டுநருக்கு முன்னால் உள்ளவற்றை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொருவரும் சட்டப்படி நடக்க வேண்டும் என சமூக மக்களை வற்புறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புகாரானது, கேரள டி.ஜி.பி. மற்றும் மோட்டார் வாகன துறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. கேரளாவில் பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் பேரணி அது. இந்த நிலையில், அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story