வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கை.. காங்கிரசின் மனுக்களை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்டு


வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கை.. காங்கிரசின் மனுக்களை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்டு
x

காங்கிரஸ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்கனவே ரத்து செய்தது.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.199 கோடிக்கும் அதிகமாக வருமானம் இருப்பதாக மதிப்பிட்ட வருமான வரித்துறை, முந்தைய வரி பாக்கியுடன் சேர்த்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக வரி செலுத்தவேண்டும் என மறுமதிப்பீடு செய்தது. இந்த நிலுவை வரியை வசூலிக்க சமீபத்தில் காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஆனால், வருமான வரித்துறையின் மறுமதிப்பீடு நடவடிக்கையை எதிர்த்து புதிதாக மனு செய்ய அனுமதி அளித்தது. அதன்படி, காங்கிரஸ் தரப்பில் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, புருஷைந்திர குமார் கவுரவ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, வருமான வரித்துறையின் மறுமதிப்பீடு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story