கனமழை எதிரொலி: சபரிமலைக்கு "ரெட் அலர்ட்"


கனமழை எதிரொலி: சபரிமலைக்கு ரெட் அலர்ட்
x

கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்,

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

இந்த சூழலில் கேரளாவில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று வருகின்றனர். தற்போது அங்கு கனமழை பெய்து வருவது பக்தர்களுக்கு பெரும் இடர்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் வருகை இப்போதே எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் சிறப்பு ரெயில்கள், விமானங்களில் இருமுடி அனுமதி என பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. இது பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கோவில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இதன்படி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.


Next Story