அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இமாச்சல மந்திரி விக்ரமாதித்யா பங்கேற்கிறார்


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இமாச்சல மந்திரி விக்ரமாதித்யா பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 8 Jan 2024 12:34 PM GMT (Updated: 9 Jan 2024 8:52 AM GMT)

மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிம்லா,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனும், பொதுப்பணித்துறை மந்திரியுமான விக்ரமாதித்ய சிங்கிற்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இமாச்சலப் பிரதேசத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழைப் பெற்ற ஒரே காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அயோத்தியில் நடக்க உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளதாக இமாச்சலப் பிரதேச பொதுப்பணித்துறை மந்திரி விக்ரமாதித்ய சிங் இன்று தெரிவித்துள்ளார். மேலும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்களுக்கு இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில் விக்ரமாதித்ய சிங் தனது நிலைப்பாட்டை தற்போது தெரிவித்திருக்கிறார். மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்பதா என்பது குறித்து "மிக விரைவில்" முடிவெடுப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


Next Story