ஐதராபாத் பெண் ஆஸ்திரேலியாவில் கொலை.. நாடு திரும்பிய கணவன் மீது குற்றச்சாட்டு


ஐதராபாத் பெண் ஆஸ்திரேலியாவில் கொலை.. நாடு திரும்பிய கணவன் மீது குற்றச்சாட்டு
x
கொலை செய்யப்பட்ட பெண்

பெண்ணின் உடலை ஐதராபாத் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியிருப்பதாக உப்பல் தொகுதி எம்.எல்.ஏ. கூறினார்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சைதன்ய மதகனி (வயது 36). இவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தன் கணவனுடன் வசித்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சைதன்ய மதகனி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பக்லே கிராமத்தில் சாலையோரம் உள்ள சிறிய குப்பைத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சைதன்ய மதகனியின் கணவர், குழந்தையுடன் நாடு திரும்பினார். ஐதராபாத் வந்த அவர், குழந்தையை மாமனார் வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த உப்பல் தொகுதி எம்.எல்.ஏ. பண்டாரி லஷ்ம ரெட்டி, பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்கள் மகளின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

இதுபற்றி எம்.எல்.ஏ. பண்டாரி லஷ்ம ரெட்டி கூறியதாவது:-

பெண்ணின் உடலை ஐதராபாத் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். மத்திய மந்திரி கிஷன் ரெட்டியின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். மேலும், அந்த பெண்ணை அவரது கணவன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலை செய்ததை கணவன் ஒப்புக்கொண்டார் என பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, விக்டோரியா காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சைதன்ய மதகனியின் கொலையில் அவருக்கு தெரிந்த நபர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story