சுப்ரீம் கோர்ட்டில் விசித்திர வழக்கு; தன்னுடைய கொலை வழக்கில் ஆஜரான சிறுவனால் பரபரப்பு


சுப்ரீம் கோர்ட்டில் விசித்திர வழக்கு; தன்னுடைய கொலை வழக்கில் ஆஜரான சிறுவனால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Nov 2023 12:22 AM GMT (Updated: 12 Nov 2023 12:51 AM GMT)

வருகிற ஜனவரியில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு மேற்கொள்ள உள்ளது.

பிலிபித்

உத்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவானது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்படி, அபய் சிங் என்ற 11 வயது சிறுவனின் தந்தை, சிறுவனின் தாத்தா மற்றும் மாமா மீது புகார் அளித்துள்ளார். அதில், அவர்கள் இருவரும் சேர்ந்து சிறுவனை கொலை செய்து விட்டனர் என தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இதுபற்றிய வழக்கு விசாரணையின்போது, அலகாபாத் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகிய சிறுவன் அபய் சிங், உயிருடனேயே நான் இருக்கிறேன் என கூறியுள்ளான்.

ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. இதனால், சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போதும் நேரில் ஆஜராகி இருக்கிறான். இதனை கவனத்தில் கொண்ட கோர்ட்டு, உத்தர பிரதேச அரசு, பிலிபித் போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் நியுரியா காவல் நிலைய உயரதிகாரி ஆகியோரிடம் இருந்து விளக்க அறிக்கைகளை கேட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும்வரை சிறுவன் மற்றும் அவனுடைய தாத்தாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது.

அபய் கோர்ட்டில் கூறும்போது, தாத்தா, பாட்டியுடன் பாதுகாப்பாக வசித்து வருகிறேன். போலீசார் எங்களுடைய வீட்டுக்கு வந்து, அவர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். நான் அவர்களுடனேயே வசிக்க விரும்புகிறேன். அதனால், இந்த வழக்கை முடிக்கவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளான்.

இந்த விவகாரத்தில், வரதட்சணை கேட்டு அபயின் தாயாரை, தந்தை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், 2013-ம் ஆண்டு முதல் தாத்தாவுடன் சிறுவன் அபய் வசித்து வருகிறான்.

அபயின் தாயார் மரணம் அடைந்ததும், தந்தைக்கு எதிராக தாத்தா புகார் அளித்திருக்கிறார். இதற்கு பழி வாங்கவே அபயை கொலை செய்து விட்டனர் என அபயின் தந்தை குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வருகிற ஜனவரியில் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து கொள்ளப்பட உள்ளது.


Next Story