பட்டாசு ஆலையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை அறிந்து வேதனை அடைந்தேன் - பிரதமர் மோடி


பட்டாசு ஆலையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை அறிந்து வேதனை அடைந்தேன் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Feb 2024 2:21 PM GMT (Updated: 17 Feb 2024 2:44 PM GMT)

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சென்னை,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை அறிந்து வேதனை அடைந்தேன். பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.


Next Story