'இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்'; போலீசாரிடம், கைதான பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள்


இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்; போலீசாரிடம், கைதான பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள்
x

இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்றும், தன்னை சிறையில் அடையுங்கள் அல்லது தூக்கில் போடுங்கள் என்றும் போலீசாரிடம் கைதான பெண் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்றும், தன்னை சிறையில் அடையுங்கள் அல்லது தூக்கில் போடுங்கள் என்றும் போலீசாரிடம் கைதான பெண் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பெண் கைது

பெங்களூரு ஜுன்னசந்திரா பகுதியில் முலாயம் சிங்(வயது 25) என்பவர் தனது மனைவி இக்ரா ஜீவனியுடன்(19) வசித்து வந்தார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த முலாயம் சிங் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார். அவர் தனது மனைவிக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது மனைவி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இதையடுத்து இக்ரா ஜீவனி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இதுகுறித்து விசாரித்தனர்.

இதற்கிடைய இந்தியாவுக்குள் அண்டை நாட்டினர் ஊடுருவியதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் விசாரணை மற்றும் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜீவனிக்கும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த முலாயம் சிங்கிற்கும் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது. மேலும் விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததும், திருமணம் செய்ய முடிவு எடுத்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு விமானத்தில் சுற்றுலா விசாவில் இக்ரா ஜீவனி வந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள கோவிலில் இந்த முறைப்படி இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இதையடுத்து வங்கதேசம் வழியாக பீகாருக்குள் அவர்கள் ஊடுருவி உள்ளனர். பின்னர் பெங்களூருவில் குடியேறிய அவர்கள், வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். மேலும், முலாயம் சிங் பெங்களூருவில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளது தெரிந்தது. இதற்கிடையே இக்ரா ஜீவனி, பாகிஸ்தானில் உள்ள தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து மத்திய புலனாய்வு முகமைக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கர்நாடக போலீசார் உதவியுடன் 2 பேரையும் கைது செய்தது தெரியவந்தது.

தூக்கில் போடுங்கள்

இந்த நிலையில் கைதான இக்ரா ஜீவனியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பும் முயற்சியையும் ஒருபக்கம் மேற்கொண்டனர். அப்போது இக்ரா ஜீவனி, நான் இந்தியாவிலேயே இருக்கிறேன். பாகிஸ்தானுக்கு போக விருப்பம் இல்லை. நான் முலாயம் சிங்கை காதலித்தேன். அதனால் தான் நான் இந்தியாவுக்கு வந்தேன். என்னை சிறையில் அடையுங்கள் அல்லது தூக்கில் போடுங்கள், ஆனால் நான் இந்தியாவைவிட்டு செல்லமாட்டேன் என கூறி போலீசிடம் கண்ணீர் விட்டு கதறி அழுது வேண்டுகோள் விடுத்தார்.

இதனால் பாகிஸ்தான் பெண் விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது. அவரை நாடு கடத்தும் முயற்சிகளை இந்திய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனினும், அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவண ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பதால், போலீசார் அதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story