ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா புதிய சாதனை


ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா புதிய சாதனை
x

4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

புதுடெல்லி,

வானில் 25 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை அழிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) ஆகாஷ் ஏவுகணை அமைப்பை வடிவமைத்து தயாரித்து உள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது. இது டி.ஆர்.டி.ஓ.வால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த ஏவுகணை அமைப்பு நேற்று விமானப்படை அதிகாரிகளால் சோதித்து பார்க்கப்பட்டது.

அப்போது வானில் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4 ஆளில்லா விமானங்களை இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இது ஒரே ஏவுதல் அலகில் இருந்து செலுத்தப்பட்டது என்பது சிறப்பாகும். இதன் மூலம் ஒரே ஏவுதல் அலகில் இருந்து 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

இது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ. தனது எக்ஸ் தளத்தில், 'ஆகாஷ் ஏவுகணை அமைப்பு இந்திய விமானப்படையால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒற்றை ஏவுதல் அலகு மூலம் ஒரே நேரத்தில் 25 கி.மீ. தூரத்தில் 4 வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனை வெளிப்படுத்திய முதல் நாடு இந்தியா' என குறிப்பிடப்பட்டு இருந்தது.


Next Story