இந்தியா-சீனா 19-வது சுற்று பேச்சுவார்த்தை: கிழக்கு லடாக்கில் ராணுவ துருப்புகள் திரும்ப பெறப்படுமா?


இந்தியா-சீனா 19-வது சுற்று பேச்சுவார்த்தை: கிழக்கு லடாக்கில் ராணுவ துருப்புகள் திரும்ப பெறப்படுமா?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Aug 2023 12:21 AM GMT (Updated: 15 Aug 2023 5:36 AM GMT)

கிழக்கு லடாக்கில் ராணுவ துருப்புகளை திரும்ப பெறுவது குறித்து இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் 19-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் லடாக் மண்டலத்தில் கடந்த 2020 ஜூன் 14-ந் கல்வான் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நுழைந்ததால், இந்திய ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி போராடினர். இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைத்து கூறியபோதிலும், பின்னாட்களில் அவர்கள் தரப்பிலும் 38 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து லடாக்கின் முக்கிய எல்லைகளில் சீனா ராணுவத்தை குவித்தது. இதனால் பாதுகாப்பை அதிகப்படுத்தும் விதமாக இந்தியாவும் தயாராக ராணுவத்தினரை நிறுத்தியது. இது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தொடர் பேச்சுவார்த்தைகள்

இதையடுத்து போர்ச்சூழலை தணிக்கும் விதமாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தன. கடந்த ஏப்ரல் வரை 18 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. பல்வேறு கட்ட விரிவான ராஜதந்திர மற்றும் ராணுவப் பேச்சுக்களைத் தொடர்ந்து இரு தரப்பினரும் லடாக்கின் பல பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெற்றனர்.

இருந்தபோதிலும், கிழக்கு லடாக் முனைகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் இருதரப்புமே ராணுவ துருப்புகளை தயார் நிலையில் நிறுத்தி உள்ளது.

கடைசியாக, ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற ராணுவப் பேச்சுவார்த்தையின் 18-வது சுற்றில், டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் நீடித்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியத் தரப்பு கடுமையாக அழுத்தம் கொடுத்தது.

19-வது கட்ட பேச்சுவார்த்தை

இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் துருப்புகளை திரும்ப பெற்று பதற்றத்தை தணிக்கும் வகையில் மீண்டும் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது. இந்த பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. 19-வது கட்ட பேச்சுவார்த்தையான இதில் இந்திய சீன படைகளின் கமாண்டர் தரத்திலான அதிகாரிகள் பங்கேற்று பேசினர்.

இந்திய எல்லைகட்டுப்பாட்டு பகுதியான சூசுல்- மோல்டோ எல்லையில் இந்த பேச்சுவார்தை நடந்தது. பேச்சுவர்த்தைக்கு இந்திய தரப்பில் லே ராணுவ தலைமையகத்தின் கமாண்டரான லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமை ஏற்றார். சீன தரப்பில் தெற்கு சின்ஜியாங் ராணுவ மாவட்டத்தின் கமாண்டர் தலைமை தாங்கினார். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சு வார்த்தை மாலை வரை தொடர்ந்து நடந்தது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.


Next Story