சைதை துரைசாமியின் மகன் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை - இமாசலபிரதேச காவல்துறை


சைதை துரைசாமியின் மகன் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை - இமாசலபிரதேச காவல்துறை
x

சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிம்லா,

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார். இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அருகே மலைப்பாங்கான பகுதியில் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் நேற்று காரில் சென்றுள்ளார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் கார் டிரைவர் பலியானார். காரில் பயணித்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமி மாயமானார். கார் ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது வெற்றி துரைசாமி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சட்லஜ் நதி, பக்ரா நங்கல் அணையில் வெற்றி துரைசாமியை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெற்றி துரைசாமி குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தகவல் அறிய இரண்டு நாட்களாகும் என்றும் இமாச்சலபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story