ஜம்மு: ராணுவ வீரர்கள் மரணம்; ரஜோரி பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


ஜம்மு:  ராணுவ வீரர்கள் மரணம்; ரஜோரி பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 6 May 2023 7:10 AM GMT (Updated: 6 May 2023 7:14 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த ரஜோரி பகுதிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பயணம் மேற்கொண்டார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் கந்தி வன பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு நேற்று சென்றனர். அந்த பகுதியை சுற்றி வளைத்து, அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, அவர்களது உடல்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா வீரர்களின் உடல்களுக்கு இன்று நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த ரஜோரி பகுதிக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். அவருடன் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவும் செல்கிறார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் பயங்கரவாதிகளுடன் இன்று நடந்த என்கவுண்ட்டரில் வீரர்கள் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து உள்ளனர். தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story