பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுடன் தொடர்பு - பா.ஜ.க. நிர்வாகி கைது


பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுடன் தொடர்பு - பா.ஜ.க. நிர்வாகி கைது
x

பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த பா.ஜ.க. நிர்வாகியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகியோர் தான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

அந்த 2 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். என்.ஐ.ஏ.வால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய இருவரையும் பற்றி யாரேனும் துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பை நிகழ்த்த குற்றவாளிகளுக்கு வெடிப்பொருட்களை சப்ளை செய்ததாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு முஜாமில் ஷெரீப் என்பவரை பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அதேவேளை, தீர்த்தஹள்ளியில் உள்ள முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேரின் வீடுகளிலும், அங்குள்ள ஒரு செல்போன் கடையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களுடன் பா.ஜ.க நிர்வாகி சாய்பிரசாத் என்பவர் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதையடுத்து சாய்பிரசாத் பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் அவர் தனது செல்போன் மூலம் யார், யாரிடமெல்லாம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் என்பது பற்றிய தகவல்களையும் சேகரித்தனர். அப்போது முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகியோருடன் சாய்பிரசாத் தொடர்பில் இருந்தது உறுதியானது.

இந்நிலையில், பா.ஜ.க. நிர்வாகி சாய்பிரசாத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். தீர்த்தஹள்ளியில் கைது செய்யப்பட்ட சாய்பிரசாத் விசாரணைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பா.ஜ.க நிர்வாகி கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story