அமலாக்கத்துறை அனுப்பிய 7வது சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்


அமலாக்கத்துறை அனுப்பிய 7வது சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
x

இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம், மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 வது முறையாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story