'தனது சொந்த செயல்களால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்' - அன்னா ஹசாரே


தனது சொந்த செயல்களால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார் - அன்னா ஹசாரே
x

மதுவுக்கு எதிராக குரல் எழுப்பியவர் மதுபானக் கொள்கையை தயாரிப்பதை நினைத்து வருத்தப்படுவதாக அன்னா ஹசாரே தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய விசாரணைக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மனு தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கெஜ்ரிவால் மீதான இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது சொந்த செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளார் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற ஒரு நபர், என்னுடன் பணியாற்றி மதுவுக்கு எதிராக குரல் எழுப்பியவர், இன்று மதுபானக் கொள்கையை தயாரிக்கிறார் என்பதை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் என்ன செய்ய முடியும், இப்போது எது நடந்தாலும் சட்டப்படிதான் நடக்க வேண்டும். தனது சொந்த செயல்கள் காரணமாகவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்."

இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.


Next Story