கேரளா: குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நபர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசார்


கேரளா: குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நபர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசார்
x

கேரளாவில் குடித்து விட்டு கார், பஸ் ஓட்டிய வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்து உள்ளனர்.



கொச்சி,


கேரளாவில் நடந்த சாலை விபத்தில் பைக்கில் சென்ற நபர் ஒருவர் பஸ் மோதியதில் பலியானார். போலீசார் நடத்திய விசாரணையில், பஸ் ஓட்டுனர் குடித்து விட்டு, கவனமின்றி வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த தனியார் பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். போலீசார் தங்களது பிடியை இறுக்க தொடங்கினர். இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கொச்சி போலீசார் அறிவித்தனர்.

இந்நிலையில், திரிபுனித்துரா காவல் நிலைய போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில், குடித்து விட்டு வாகனம் ஓட்டி சென்ற பஸ் மற்றும் வேன் வாகன ஓட்டுனர்கள் அதிரடியாக பிடிக்கப்பட்டனர்.

அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் கையில் பேப்பரும், பேனாவும் கொடுத்து தரையில் அமர செய்து, இனி நான் குடித்து விட்டு வாகனம் ஓட்டி செல்ல மாட்டேன் என எழுதும்படி நூதன தண்டனை கொடுத்து உள்ளனர்.

அதுவும் ஓரிரு முறை அல்ல. ஓராயிரம் முறை இதுபோன்று எழுத வேண்டும். இதன்படி, தனியார் பஸ் ஓட்டுனர்கள் 12 பேர், 2 கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் ஓட்டுனர்கள் 2 பேர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் 2 பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.


Next Story