அமெரிக்கா: உறைந்த ஏரியில் விழுந்து பலியான தம்பதியரின் மகள்கள்... இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு


அமெரிக்கா: உறைந்த ஏரியில் விழுந்து பலியான தம்பதியரின் மகள்கள்... இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு
x

அமெரிக்காவில் உறைந்த ஏரியில் விழுந்து பலியான தம்பதியரின் செல்ல மகள்களை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

டாலர் தேசமான அமெரிக்கா, பனிப்புயலாலும், பனிப்பொழிவாலும் பனிப்பிரதேசமாக மாறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களும், கனடா மக்களும் இந்த பனிப்புயலால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

பனிவெளியை பார்க்க போனவர்கள்....

இந்த நிலையில், அங்கே அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய தம்பதியர், நாராயண முத்தனா (வயது 49), ஹரிதாவுக்கு, 12 மற்றும் 7 வயதில் உள்ள தங்கள் இரு செல்ல மகள்களோடு இன்பச்சுற்றுலா செல்ல ஆசை வந்தது. அதற்கு காரணம் இருந்தது. ஹரிதாவின் பிறந்த நாளை இப்படி வெளியே போய் கொண்டாட வேண்டும் என்று.

6 பெரியவர்கள், 5 குழந்தைகளைக் கொண்ட 3 குடும்பங்கள் தங்கள் பகுதியில் இருந்து பனிவெளிகளை பார்த்து ரசித்து அனுபவிக்க, கடந்த 26-ந் தேதி காரில் புறப்பட்டார்கள்.

புகைப்படம் எடுக்கப்போனவர்கள்...

அங்கே கோகோனினோ கவுண்டிக்கு சென்றார்கள். உறைந்து போன உட்ஸ் கேன்யன் ஏரிக்குச் செல்லவும் ஆசைப்பட்டார்கள். போனார்கள்.

உறைந்து போன ஏரியைப் பார்த்ததும், நாராயண முத்தனா, ஹரிதா, அவர்களது நண்பர் கோகுல் சேத்தி (47) ஆகியோருக்கு, அதில் நடக்கவும், அதைப் படம்பிடிக்கவும் ஆசை வந்தது.

அந்த ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டார்கள். பாவம், அவர்களுக்குத் தெரியாது, இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கப்போவதில்லை, அடுத்த சில நிமிடங்களில் அது துயரமாக உருவெடுக்கப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க ஒரு நியாயம் இல்லை.

உறைந்து போன ஏரியில் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்களை அறியாமல் உயிரை உறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரி வெப்ப நிலை கொண்ட தண்ணீரில் தவறி விழுந்தார்கள்.

உடனே மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டார்கள். ஹரிதாதான் முதலில் மீட்கப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்திருந்தார். மறுநாளில்தான் அவரது கணவர் நாராயண முத்தனாவும், கோகுல் சேத்தியும் உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர்.

இந்த துயரம், இரு குடும்பங்களையும் மீளாத சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவை கண்ணீரும், கம்பலையுமாய் தத்தளிக்கின்றன.

ஒரே நாளில் அனாதையான குழந்தைகள்...

ஒரே நாளில் நாராயண முத்தனா, ஹரிதா தம்பதியரின் செல்ல மகள்கள், தங்கள் அன்புப்பெற்றோரை இழந்து அனாதையாகி நிர்க்கதியாய் நிற்கிறார்கள்.

அந்த நாட்டின் சட்டப்படி தற்போது அவர்கள் இருவரும் அரிசோனா மாகாண குழந்தைகள் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா வருகிறார்கள்...

அந்தக் குழந்தைகளை அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான கிஷோர் பிட்டாலா தனது பாதுகாப்பில் பெற்று, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்கிற தகவலை அரிசோனா தெலுங்கு சங்கத்தின் தலைவர் வெங்கட் கொம்மினேனி தெரிவித்துள்ளார்.

அந்தக் குழந்தைகளின் தாத்தா, பாட்டி அதாவது நாராயண முத்தனாவின் பெற்றோர் வெங்கட சுப்பாராவும், வெங்கட ரத்னமும்தான் இனி அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். இவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பாலப்பற்று கிராமத்தில் வாழ்கிறார்கள். இத்தனை நாட்களாய் அமெரிக்காவில் வசித்து வந்த மகனது குடும்பத்துக்காக காத்திருந்தவர்கள், இந்த முறை பேரக்குழந்தைகளுக்காக மட்டுமே கலங்கிய கண்களோடு காத்திருக்கிறார்கள்.

"அங்கே பனிப்புயல் வீசிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே, எப்படி இருக்கிறாய் என்று கடந்த வாரம்தான் எனது மகன் நாராயண முத்தனாவை செல்போனில் அழைத்துப்பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவா?" என சொல்லிச்சொல்லி மாய்ந்து போகிறார், வெங்கட சுப்பாராவ்.

நாராயணா முத்தனா, ஹரிதா தம்பதியரோடு பலியான கோகுல் சேத்திக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாராயண முத்தனா, கோகுல் சேத்தி குடும்பங்களுக்கு உதவுவதற்காக 'கோபண்ட்மீ' என்ற பெயரில் நிதி திரட்டுகிறார்கள். நேற்று வரை 5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.14 கோடி) திரண்டிருக்கிறதாம்.


Next Story