சுவரில் தலையை முட்டி உறவினர் கொலை; கூலித் தொழிலாளி கைது


சுவரில் தலையை முட்டி உறவினர் கொலை; கூலித் தொழிலாளி கைது
x

ஹாவேரி அருகே குடிபோதையில் சுவரில் தலையை முட்டி உறவினரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா ஆதூரு கிராமத்தை சேர்ந்தவர் மைலாரப்பா (வயது 45). இவரது உறவினர் மகன் ரமேஷ் (25). இவர் கூலித் தொழிலாளி ஆவார். ரமேசுக்கு, மைலாரப்பா உறவு முறையில் மாமா ஆகும். நேற்று மைலாரப்பா தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு ரமேஷ் வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மாமா மைலாரப்பாவின் தலையை வீட்டின் சுவற்றில் பல முறை முட்டியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி ஹனகல் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் ஹனகல் போலீசார் விரைந்து வந்து மைலாரப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் ஹாவேரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது மாமா மைலாரப்பாவை ரமேஷ் கொலை செய்தது தெரியவந்தது. கடந்த 20 நாட்களாகவே 2 பேருக்கும் இடையே சாதாரண பிரச்சினைக்கு தகராறு ஏற்பட்டு வந்ததும், அந்த முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரமேசை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story