கே.ஆர்.எஸ். அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு


கே.ஆர்.எஸ். அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
x

பிறந்தநாள் கொண்டாட சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கே.ஆர்.எஸ். அணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

மைசூரு:

மைசூரு டவுன் படுவாரஹள்ளியை சேர்ந்தவர் தேவேகவுடா. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு பரத் (வயது 20). இவர் மைசூரு டவுன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

பரத்துடன் ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), ஹெப்பாள் பகுதியை சேர்ந்த வருண் (21), ராஜா, மனோஜ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் படித்து வந்தனர். இந்தநிலையில், பரத்துக்கு கடந்த 14-ந் தேதி பிறந்தநாள் ஆகும்.

அவர் அன்றைய தினம் வீட்டில் பரத்தின் பிறந்தநாளை பெற்றோர் மற்றும் நண்பர்கள் கொண்டாடினர். இந்தநிலையில் பரத்தின் நண்பர்கள் பிறந்தநாள் விருந்து வைக்க வேண்டும் என பரத்திடம் கூறினர். அவரும் பிறந்தநாள் விருந்து வைப்பதாக நண்பர்களிடம் தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று மாைல கல்லூரி முடிந்ததும் பரத் உள்பட 5 பேரும் பிறந்தநாள் கொண்டாட மோட்டார் சைக்கிள்களில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றனர்.

அங்கு சென்ற அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு அங்கிருந்து மைசூரு தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள் 5 பேரும் தண்ணீரில் உற்சாமாக குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது பரத் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தார். இதனை கவனித்த பிரவீன், வருண் ஆகியோர் பரத்தை காப்பாற்ற சென்றனர். அப்போதும் அவர்கள் 2 பேரும் ஒன்றன்பின் ஒன்றாக தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து ராஜா, மனோஜ் மற்றும் விக்னேஷ் மைசூரு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் குதித்து அவர்கள் 3 பேரையும் தேடினர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவர்கள் அவர்கள் 3 பேரையும் பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இளவாலா போலீசார் 3 பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இளவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிறந்தநாள் கொண்டாட சென்றபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் கே.எஸ்.ஆர். அணையில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story