நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ்


நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ்
x
தினத்தந்தி 29 Jan 2024 9:09 AM GMT (Updated: 30 Jan 2024 7:22 AM GMT)

இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. முன்னதாக இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவை அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து, லாலு பிரசாத் மற்றும் அவரது மகனுக்கும் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதன்படி லாலு பிரசாத் கடந்த டிசம்பர் 29-ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கடந்த டிசம்பர் 30-ம் தேதியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், நில மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பு இன்று ஆஜரானார். பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தனது மகள் மிசா பாரதியுடன் காலை 11.05 மணியளவில் லாலு பிரசாத் யாதவ் வந்தார். அப்போது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரும், ஏராளமான தொண்டர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்பு குவிந்திருந்தனர்.

அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மிசா பாரதி கூறியதாவது, "எங்கள் குடும்ப உறுப்பினர்களை மத்திய அரசு எத்தனை தடவை விசாரணைக்கு அழைத்தாலும், நாங்கள் அங்கு சென்று அவர்களுடன் ஒத்துழைத்து அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம். அனைத்தும் மக்கள் முன்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story