சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி


சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி
x

மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் ரத்தம் வழிகிற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

முதலில் அவருக்கு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து அவர் இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ சயின்சஸ்-க்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மம்தா பானர்ஜி, வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியதில் அவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.


Next Story