மின்வாரிய ஊழியர், மனைவி-மகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


மின்வாரிய ஊழியர், மனைவி-மகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
x

கடன் தொல்லையால் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், மனைவி-மகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:

கடன் தொல்லையால் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், மனைவி-மகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மின்வாரிய ஊழியர்

கர்நாடக மாநிலம் துமகூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் சித்தகங்கா (வயது 62). இவர் கர்நாடக மின்வாரிய முன்னாள் ஊழியர் ஆவார். பணி ஓய்வுக்கு பிறகு அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவர் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கே.சி. அரசு ஆஸ்பத்திரி அருகே டீக்கடை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது மனைவி சுனந்தம்மா மற்றும் மகள் கீதா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நாளுக்கு நாள் அவருக்கு கடன் தொல்லை அதிகரித்ததாக கூறப்படுகிறது.இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

தண்டவாளத்தில் 3 பேரின் பிணம்

இந்த நிலையில் அவர் தனது மனைவி, மகளுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே துமகூரு செல்லும் வழியில் பெங்களூரு புறநகர் பண்டிதனஹள்ளி ரெயில்வே தண்டவாளம் அருகே சித்தகங்கா, அவரது மனைவி சுனந்தம்மா, மகள் கீதா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தற்கொலை

அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் கடன் தொல்லையால் சித்தகங்கா, தனது மனைவி, மகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து சம்பவம் குறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சித்தகங்கா மற்றும் அவரது குடும்பத்தினரின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story