முறை தவறிய காதல்... பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு


முறை தவறிய காதல்... பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு
x

இருவரும் உறவு முறையில் அண்ணன்-தங்கை என்பதால் இருவீட்டாரும் முறை தவறிய உறவு என கூறி காதலை கைவிட அறிவுறுத்தினர்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் யாத்ரமி தாலுகா மாகனகெரே கிராமத்தை சேர்ந்தவர் கொல்லப்பா(வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் சசிகலா(வயது 20) என்பருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உறவு முறையில் அண்ணன்-தங்கை என்பதால் இருவீட்டாரும் முறை தவறிய உறவு என கூறி காதலை கைவிட அறிவுறுத்தினர். ஆனால் கொல்லப்பா மற்றும் சசிகலா ஆகியோர் காதலை கைவிடவில்லை.

இதற்கிடையே சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கிராமத்தை சேர்ந்த வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும் திருமண ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர். இதுபற்றி கொல்லப்பாவுக்கு நேற்று முன்தினம் தெரியவந்தது. இதையடுத்து கொல்லப்பா, சசிகலாவை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி சசிகலாவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு ஓடினார்.

மேலும் கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடியது பற்றி அறிந்தவுடன் இருவீட்டாரும் அவர்களை தேடினர். இதற்கு இடையே பெற்றோர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என நினைத்த கொல்லப்பா மற்றும் சசிகலா கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

முன்னதாக அவர்கள் தற்கொலை செய்வது மற்றும் அதற்கான காரணத்தை வீடியோவாக எடுத்து தங்கள் வாட்ஸ்-அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பினர். இதுபற்றி அறிந்தவுடன் பதறிய குடும்பத்தினர் கிராமத்தின் புறநகர் பகுதிக்கு விரைந்தனர். அங்கு மரத்தில் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி யாத்ரமி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கொல்லப்பா மற்றும் சசிகலா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story