'மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x

Image Courtesy : ANI

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்ததாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஐதராபாத்,

வெளிநாடுகளிலும், போர் பதற்றம் நிலவும் பகுதிகளிலும் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு இந்திய அரசுக்கு மிகவும் முக்கியமானது என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது;-

"பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது. கொரோனா காலகட்டத்திலும், உக்ரைன் போர், இஸ்ரேல் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களிலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது.

உலகில் தற்போது எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் தவறாகப் போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்து சூழல்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நமது எல்லைகளில் நமக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. அதை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு அவசியம். நமது ராணுவத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமானது.

கடந்த 1992-ம் ஆண்டு இஸ்ரேலில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை அங்கு இந்திய தூதரகம் இல்லை. தொடர்ந்து 1992 முதல் 2017 வரை பிரதமர் மோடியை தவிர எந்தவொரு இந்திய பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றதில்லை. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய தவறை நாங்கள் திருத்தியிருக்கிறோம்."

இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Next Story