2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்


2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 5 March 2024 3:46 AM GMT (Updated: 5 March 2024 3:49 AM GMT)

குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

சாம்ராஜ்நகர்,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(வயது 28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜோதி, தனது கணவருடன் ஹொரேயாலா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவர்களுக்கு பாந்தவ்யா(7), மானசா(3) என 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதி மனமுடைந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் யோகேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த ஜோதி, தனது 2 மகள்களையும் தூக்கிலிட்டு கொன்றார். பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ஜோதியின் வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர், ஜோதியும், அவரது குழந்தைகளும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி அவர்கள் பேகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஜோதி மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக ஜோதி தனது 2 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story