லாரியில் தள்ளி டிரைவர் கொலை; 4 பேர் கைது


லாரியில் தள்ளி டிரைவர் கொலை; 4 பேர் கைது
x

பெங்களூருவில், லாரியில் தள்ளி டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில், லாரியில் தள்ளி டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வாகன கண்ணாடி உடைந்தது

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா அருகே சாந்திபுரா பகுதியில் வசித்து வந்தவர் ஹரிகிருஷ்ணா(வயது 25). இவர் சரக்கு வேன் டிரைவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணா ஓட்டி சென்ற சரக்கு வாகனம் இன்னொரு சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் இன்னொரு சரக்கு வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

இதுதொடர்பாக ஹரிகிருஷ்ணாவுக்கும், இன்னொரு சரக்கு வாகனத்தின் உரிமையாளரான பாஸ்கர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹரிகிருஷ்ணா வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து ஹரிகிருஷ்ணாவை தாக்கியதாக தெரிகிறது.

லாரியில் தள்ளி கொலை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணாவின் உறவினரான சுபாஷ் என்பவர் பாஸ்கர் உள்பட 4 பேரையும் தடுக்க முயன்றார். அப்போது சுபாசையும், ஹரிகிருஷ்ணாவையும் பாஸ்கர் உள்பட 4 பேரும் கடத்தி சென்று ஒரு இடத்தில் சிறைவைத்து தாக்கியதாக தெரிகிறது. மேலும் அந்த வழியாக வந்த ஒரு லாரியின் முன்பு ஹரிகிருஷ்ணாவை பிடித்து பாஸ்கர் உள்பட 4 பேரும் தள்ளியதாக தெரிகிறது.

இதில் லாரி மோதி படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணாவை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஹரிகிருஷ்ணா இறந்து விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story