பீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்


பீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
x

Image Courtacy: PTI

பீகார் பேரவையில் பெண்கள் பற்றி சர்ச்சைக்குரியவகையில் நிதிஷ்குமார் கூறிய கருத்து பதிவுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னா,

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை அந்த மாநில அரசு நடத்தியுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கை அந்த மாநில சட்டசபையில் நேற்று முன்வைக்கப்பட்டது. அப்போது நடந்த விவாதத்தில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசுகையில், 'மாநிலத்தில் இதர பிற்பட்டோருக்கான (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.க்கான இடஒதுக்கீடு 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக, உரிய ஆலோசனைக்குப் பிறகு தேவையானதை செய்வோம். இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான சட்ட மசோதாவை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே கொண்டுவர எண்ணியுள்ளோம்." என்று அவர் கூறினார்.

இதனிடையே மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும்போது பெண்கள் குறித்து நிதிஷ் குமார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் அம்மாநில சபாநாயகர் அவாத் பிகாரி சவுத்ரிக்கு பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் உள்ளார். பொறுப்பான பதவியில் இருப்பவர் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நிதிஷ் குமார் பேசிய பேச்சை சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story