டெல்லி சென்றார் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் : சோனியா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்


டெல்லி சென்றார் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் : சோனியா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்
x

கோப்புப்படம்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சோனியா உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

பாட்னா,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சோனியா உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு தேர்தல்

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.

மாநில வாரியாக வெற்றிக்கனி பறிப்பதற்கான உத்திகளை அந்தக் கட்சி தீவிரமாக வகுத்து வருகிறது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க...

இதற்கு மத்தியில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே அணியாக போட்டியிடச்செய்வதற்கான நடவடிக்கையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு, அவர் டெல்லிக்கு சென்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரைச் சந்தித்துப்பேசினார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியதின் அவசியத்தை விளக்கினார்.

டெல்லி சென்றார்

இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியைத் தொடர்வதற்காக நிதிஷ் குமார் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றார்.

அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டுவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜ.க.வை எளிதாக வீழ்த்தி விட முடியும் என்று அவர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. சாடல்

நிதிஷ் குமாரின் டெல்லி பயணத்தை பா.ஜ.க. சாடி உள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியின் பீகார் மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், "நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே நிதிஷ் குமாரின் பிரதமர் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையும் இல்லை" என கூறினார்.

ஆனால் தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என்று நிதிஷ் குமார் தொடர்ந்து கூறி வருகிறார்.


Next Story