புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு மறுப்பு


புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு மறுப்பு
x

தற்போது, புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, புதிதாக 'பந்தல்கண்ட்' மாநிலம் அமைக்க கோரிக்கை வந்துள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

புதிய மாநிலங்கள் அமைக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் மத்திய அரசிடம் மனு அளிப்பது வழக்கம்தான். ஆனால், தற்போது புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:- கடந்த 2010-ம் ஆண்டு 96 மாவட்டங்களில் 465 போலீஸ் நிலையங்களில், நக்சலைட் வன்முறை தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், 2022-ம் ஆண்டு, 45 மாவட்டங்களில் 176 போலீஸ் நிலையங்களில் மட்டுமே நக்சலைட் வன்முறை தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம், 12 ஆண்டுகளில் நக்சலைட் வன்முறை 77 சதவீதம் குறைந்துள்ளது.

அதுபோல், 2010-ம் ஆண்டில் நக்சலைட் வன்முறையால் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 1,005 பேர் பலியானார்கள். ஆனால், 2022-ம் ஆண்டு, வெறும் 98 பேர்தான் பலியானார்கள். இது, 90 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

'ஒமைக்ரான்' ஆதிக்கம்

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா வகைகளில் ஒமைக்ரானும், அதன் உருமாறிய ரகங்களும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. கடந்த 4 மாதங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட மரபணு வரிசை ஆய்வில் 1,900-க்கு மேற்பட்ட ஒமைக்ரான் உருமாறிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி 14 லட்சத்து 60 ஆயிரம் புற்று நோயாளிகள் உள்ளனர். 2025-ம் ஆண்டுவாக்கில், இந்த எண்ணிக்கை 15 லட்சத்து 70 ஆயிரமாக உயரும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய புற்றுநோய் பதிவு திட்டமும் இணைந்து கணித்துள்ளன.

இதை தடுக்க 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பொதுவான புற்றுநோய் இருக்கிறதா என்று அறிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பரிசோதனை நடத்தப்படுகிறது. மாநிலங்களில் புற்றுநோய் ஆஸ்பத்திரிகள் தொடங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


Next Story