நர்சிங் மாணவி மாரடைப்பால் சாவு


நர்சிங் மாணவி மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:46 PM GMT)

ெபல்தங்கடியில் நர்சிங் மாணவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மங்களூரு:

ெபல்தங்கடியில் நர்சிங் மாணவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தொடரும் சம்பவம்

கர்நாடகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், இளம்வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் குடகு, துமகூரு, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 6 மாணவ-மாணவிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் சாம்ராஜ்நகரில் பள்ளியில் பிரார்த்தனை பாடல் பாடிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்போது கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் நர்சிங் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

நர்சிங் மாணவி

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா நெரியா பகுதியை சேர்ந்தவர் சுமா (வயது 19). இவர் மங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சுமா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த 9-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் கடந்த 11-ந்தேதி மீண்டும் சுமாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மாரடைப்பால் சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமா தனது வீட்டில் வைத்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுமாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சுமா ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுமாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story