அழுக்கு உடை அணிந்து வந்த முதியவர், மெட்ரோ ரெயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு: ஊழியர் பணியிடை நீக்கம்


அழுக்கு உடை அணிந்து வந்த முதியவர், மெட்ரோ ரெயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு: ஊழியர் பணியிடை நீக்கம்
x

ஒரு வழியாக அந்த முதியவரும் மெட்ரோ ரெயிலில் பயணித்து மகிழ்கிறார்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜாஜிநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டார். அந்த வீடியோவில் அழுக்கு சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி தலையில் மூட்டையுடன் முதியவர் ஒருவர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வருகிறார். அவர் மெட்ரோ ரெயிலில் பயணிக்க வேண்டும் என்று அங்கு பணியில் இருப்போரிடம் கூறுகிறார். அப்போது அங்கிருந்த மெட்ரோ ரெயில் நிலைய பாதுகாப்பு மேற்பாவையாளர், அந்த முதியவரை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார். மேலும் அவரிடம் கடுமையாக பேசி அங்கிருந்து வெளியேறக்கூறி எச்சரிக்கிறார்.

அப்போது அங்கிருந்த சில பயணிகள் முதியவருக்கு ஆதரவாக மெட்ரோ ரெயில் நிலைய கண்காணிப்பு மேற்பார்வையாளரிடம் பேசுகிறார்கள். மேலும் அவரது செயலை கண்டிக்கிறார்கள். அதையடுத்து அவர்கள் அந்த முதியவரை மெட்ரோ ரெயிலில் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு வழியாக அந்த முதியவரும் மெட்ரோ ரெயிலில் பயணித்து மகிழ்கிறார். பின்னர் அவர் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனை பார்த்த பலரும் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியரின் நடவடிக்கையை கண்டித்து இருந்தனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த மெட்ரோ ரெயில் நிலைய கண்காணிப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஷ்வர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story