இறுதி சடங்கில் பங்கேற்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி; 4 பேருக்கு தீவிர சிகிச்சை


இறுதி சடங்கில் பங்கேற்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி; 4 பேருக்கு தீவிர சிகிச்சை
x

மத்திய பிரதேசத்தில் இறுதி சடங்கில் பங்கேற்றவர்களை தேனீக்கள் சூழ்ந்து தாக்கியதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.


போபால்,


மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. திடீரென இவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கு கிராமத்தில் நடந்து உள்ளது.

இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதன்பின்னர், இறுதி சடங்கிற்காக அவர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களை நோக்கி மரங்களில் இருந்த தேனீக்கள் பாய்ந்து வந்தன. அவை கூடியிருந்த கிராமவாசிகளை சூழ்ந்து கொண்டு தாக்கின. இதில், வலி பொறுக்க முடியாமல் பலர் தப்பியோடி உள்ளனர்.

என்ன, ஏது என அறிந்து கொள்வதற்கு முன்னரே பலரும் கலைந்து ஓடினர். இந்த சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் தகத் சிங் மீனா ஜெய்சிங் புரா என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்து உள்ளார்.

அவர் தவிர, 4 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இறுதி சடங்கிற்காக சென்றபோது, தீப்பந்தத்தில் இருந்து வந்த புகையால் தேனீக்கள் கலைந்து சென்றிருக்கலாம். அதனால், தாக்குதல் ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது.

வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காயமடைந்த 4 பேரும் குணா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற நபர்கள் சஞ்சோடா பகுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story