மத்திய அரசுக்கு எதிராக இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் எதிர்க்கட்சிகள்..!!


மத்திய அரசுக்கு எதிராக இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் எதிர்க்கட்சிகள்..!!
x

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 4 நாட்களாக இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது. இதுபற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்த சூழலில், பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்றம் சுமுகமுடன் நடைபெறுவதற்கான விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டமும் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் காலை 10.40 மணியளவில் சுமுக முடிவு எட்டப்பட்டது. இதில், மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

கூட்டத்தொடரில் பங்கேற்க காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் மற்றும் எம்.பி.யான சோனியா காந்தி நேற்று வருகை தந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மக்களவையில் பேசிய அவர், " நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக இருப்பதாகவும், காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேரும்" என்றும் அவர் கூறினார்.

இதன்படி 26 கட்சிகள் அடங்கிய மெகா எதிர்க்கட்சி கூட்டணி (I.N.D.I.A.) மத்திய அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளது. மணிப்பூர் நிலவரம் குறித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story