ஜாமீனில் வெளியே வந்த பாலியல் குற்றவாளி ஆசிட் குடித்து தற்கொலை


ஜாமீனில் வெளியே வந்த பாலியல் குற்றவாளி ஆசிட் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Dec 2023 11:00 AM GMT (Updated: 8 Dec 2023 11:41 AM GMT)

சிறுமியின் தாயாரை சந்தித்த பிரேம் சிங், தன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள ஒரு காலனியில் வசித்து வந்தவர் பிரேம் சிங் (வயது 54). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் பிரேமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் குடும்ப திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஜாமீன் கேட்டு பிரேம் சிங் உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் பிரேமுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது .

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த பிரேம் சிங், பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய சிறுமியின் தாயாரை நேற்று மாலையில் சந்தித்துள்ளார். அப்போது, தன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும் புகாரை வாபஸ் பெற மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரேம், அந்த சிறுமி மீது ஆசிட் வீசியுள்ளார். அதன் பின்னர் தானும் ஆசிட்டை குடித்துள்ளார்.

இருவரையும் அந்த காலனியில் இருந்த மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரேம் சிங் உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு சிறுமி வீடு திரும்பினார். ஜாமீனில் வெளியே வந்த நபர், ஆசிட் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story