அரியானா: கடந்த 5 ஆண்டுகளில் கால்நடைகளால் ஏற்பட்ட விபத்துகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


அரியானா: கடந்த 5 ஆண்டுகளில் கால்நடைகளால் ஏற்பட்ட விபத்துகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
x

Image Courtesy : AFP 

கடந்த 5 ஆண்டுகளில் அரியானா மாநிலத்தில் கால்நடைகளால் 3,383 சாலை விபத்துகள் நடந்துள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கால்நடைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அரியானா மாநிலத்தில் கால்நடைகளால் இதுபோன்ற மொத்தம் 3,383 சாலை விபத்துகள் நடந்து உள்ளதாக வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மந்திரி ஜே.பி. தலால் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுயேச்சை எம்எல்ஏ பால்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜே.பி. தலால், இந்த விபத்துகளில் 919 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 ஆயிரத்து 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தெருக்களில் சுற்றித் திரியும் தெருக் கால்நடைகளின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசின் பரிசீலனையில் முன்மொழிவு உள்ளதா என பால்ராஜ் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த மந்திரி தலால், 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலங்குகளுக்கு பல்வேறு தங்குமிடங்களில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இந்த விலங்கு நல காப்பகங்களுக்கு அரசு நிதியுதவி அளித்து வருகிறது என தெரிவித்தார்.


Next Story