தென்ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டுவர திட்டம்


தென்ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டுவர திட்டம்
x

Image Courtesy : ANI

சிறுத்தைப்புலிகள் குனோ தேசியப் பூங்காவுக்கு இந்த மாதம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

தீவிர வேட்டை, இருப்பிட அழிவு காரணமாக இந்தியாவில் சிறுத்தைப்புலிகள் கடந்த 1952-ம் ஆண்டு முற்றிலுமாக அழிந்துவிட்டன. இந்நிலையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைப்புலிகளை அறிமுகம் செய்ய ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி முதல்கட்டமாக, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டார்.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகளை கொண்டுவருவதற்கான அந்நாட்டு அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கிருந்து சிறுத்தைப்புலிகள் குனோ தேசியப் பூங்காவுக்கு இந்த மாதம் கொண்டுவரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.


Next Story