மேற்கு வங்காள வன்முறை: "போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம், ஆனால்..."- மம்தா பானர்ஜி பேச்சு


மேற்கு வங்காள வன்முறை: போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம், ஆனால்...- மம்தா பானர்ஜி பேச்சு
x

Image Courtesy: PTI 

துர்கா பூஜைக்கு சில வாரங்களே உள்ள நிலையில், போராட்ட ஊர்வலம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாக மம்தா கூறினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் முன்னாள் மந்திரிகள் சிலர், பல கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, கைது செய்யப்பட்டு, வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை முன்னிட்டு அரசின் ஊழலுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பா.ஜ.க. சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி ஒன்று நடத்துவது என முடிவானது. இதில் பங்கேற்க மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் நேற்று கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர்.

எனினும், ராணிகஞ்ச், போல்பூர் மற்றும் துர்காப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வெளியே மற்றும் பல இடங்களில் போலீசார் அவர்களை வரவிடாமல் தடுத்தனர். இதனால் கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் போலீசார் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

போராட்டங்கள் என்ற பெயரில் மாநிலத்தில் வன்முறையை நடத்த மற்ற மாநிலங்களிலிருந்து வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் குண்டர்களை பாஜக அழைத்து வந்ததாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் இன்று மாநிலத்தின் பர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள நிம்டோரியில் நடந்த நிர்வாகக் கூட்டத்தின் பேசிய மம்தா, வன்முறையில் ஈடுபட்ட பாஜக போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம், ஆனால் அரசாங்கம் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் மிகப் பெரிய திருவிழாவான துர்கா பூஜைக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இந்தப் போராட்ட ஊர்வலம் பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாக மம்தா பானர்ஜி கூறினார்.

அமைதியான போராட்டங்களுக்கு எதிராக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் ஆனால் வன்முறையை அனுமதிக்க மாட்டோம் எனவும் மம்தா தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


Next Story