கேரளாவில் பா.ஜ.க.வில் இணைந்த பாதிரியார் திருச்சபை பணிகளில் இருந்து நீக்கம்


கேரளாவில் பா.ஜ.க.வில் இணைந்த பாதிரியார் திருச்சபை பணிகளில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 5 Jan 2024 11:20 AM GMT (Updated: 5 Jan 2024 12:46 PM GMT)

பாதிரியார் ஷைஜு குரியன் சுமார் 50 குடும்பங்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் நிலக்கல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஷைஜு குரியன். இவர் பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தின் நிலக்கல் பத்ராசனம் மறைமாவட்ட செயலாளராகவும், நிலக்கல் பத்ராசனம் பள்ளியின் துணைத்தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் பாதிரியார் ஷைஜு குரியன் கடந்த டிசம்பர் 31-ந்தேதி சுமார் 50 கிறிஸ்தவ குடும்பங்களுடன், மத்திய மந்திரி வி.முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். இது தொடர்பாக பா.ஜ.க. வெளியிட்ட பேஸ்புக் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் தொலைநோக்கு வளர்ச்சி அணுகுமுறை காரணமாக சிறுபான்மையினர் பலர் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க.வில் இணைந்த பாதிரியார் ஷைஜு குரியன், திருச்சபையின் அனைத்து பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் நிலக்கல் திருச்சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story